திங்கள், 15 ஆகஸ்ட், 2011

இந்திய சுதந்திரத் திரு நாள்


நமது பாரதத்தின் 65 ஆவது சுதந்திரத் திருநாளின்று...

மாணாக்கர் அதி காலையிலேயே எழுந்து குளித்து , வெள்ளாடை அணிந்து , சட்டைப் பையில் மூவர்ணக் கொடி குத்தி , பள்ளிக்குச் சென்று கொடியேற்றி, விடுதலைப் பேருரை கேட்டு, ஆரஞ்சு மிட்டாய் சுவைத்து விடுமுறையைக் கொண்டாடக் கலைந்து சென்றாயிற்று. தலைவர்களும் தத்தம் பங்குக்கு முந்தின வருடங்களின் உரைகளைப் போலவே இந்த வருடமும் தவறாமல் உரை நிகழ்த்தித் தமது கடமைகளை செவ்வனே முடித்துக் கொண்டார்கள். துடைத்து மாட்டப்பட்ட காந்தி, நேரு படங்களும் மீண்டும் தமது இருப்பிடம் தேடி பரண்களுக்குச் சென்று விடும்.

எவ்வாறு கிடைத்தது இந்த சுதந்திரம் ?

இதனைப் பெற நமது தலைவர்கள் எத்தகைய வலிகளை மேற்கொண்டார்கள் ?

என்னென்ன போராட்டங்களில் பங்கேற்றார்கள் ?

ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளை எவ்வாறெல்லாம் எதிர் கொண்டார்கள் ?

பிரதி பலனை எதிர் பாராமல்  எத்தகைய தியாகங்களை  செய்தார்கள் ?

ஆண்டுகள் அறுபத்து நான்கு ஆகிவிட்டபடியால் நம்மில் பலருக்கு மேல் குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடையே தெரிவதில்லை.



தென்னாப்பிரிக்காவில் வெள்ளையனால் ரயில் பெட்டியிலிருந்து வெளியே தள்ளப்பட்டு பிளாட்பாரத்தில் விழுந்த  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி , எழுந்து நின்ற கணத்தில் கனல் விடத் துவங்கிய சுதந்திர தாகம் , 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் விடுதலையாக மலரும் வரை பாரதத் தாயின் புதல்வர்கள் பட்ட கஷ்டங்கள்தாம் எத்தனை எத்தனை.

உறுதி மனம் படைத்த குஜராத்திக் கிழவனின் ஒல்லியான கைத்தடிக்கு முன்னால் , ஆங்கிலேயனின் உருக்கு பீரங்கிகள் உருக்குலைந்து போன சம்பவங்கள் சரித்திரத்தின்  ஒவ்வொரு பக்கத்திலும் மிளிரும்.

ஆனந்த பவனத்தின் செல்லப் பிள்ளையாக உலா வந்த காஷ்மீரத்து ரோஜாவான நேருவின் தினங்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் செலவிடப்பட்ட விவரங்கள் வரலாற்றின் பக்கங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளனவே.

கவிதையை சுவாசித்து, வறுமையை உண்டு `ஆடுவோமே பள்ளு பாடுவோமே ' என்று கற்பனையில் விடுதலையைக் கொண்டாடிய பாரதியின் பங்களிப்புகள் உன்னதமானவையன்றோ.

கத்தும் கடலில் கப்பலோட்டிய தமிழன் வ..சிதம்பரம் பிள்ளை சுதந்திரக் காற்றினை சுவாசிக்கப் போராடியதால் , சிறைக்குள்ளே செக்கிழுத்து மாண்ட தியாகத்திற்கும் இணையுண்டோ .

பகை விரட்டிடப் போராடி தூக்குக் கயிற்றினை முத்தமிட்ட மாவீரன் பகத் சிங்கின் வீரம் அழிந்து விடக் கூடியதல்லவே

கதரின் பெருமையினை உலகுக்குப் பறை சாற்றிய அலி சகோதரர்களின் பங்களிப்புகள் அழியாப் புகழ் பெற்றவை அல்லவா.

எதற்குத் தர வேண்டும் வரி யென எஃகு ஆங்கிலேயனிடம் எக்காளமிட்டுக் கயத்தாறில் உயிர் துறந்த கட்டபொம்மனின் தியாகம் இமயத்தினும் பெரிதன்றோ .


இவை மட்டுமா ?

பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் இந்தியாவென்றும் , பாகிஸ்தானென்றும் பாரதத்தை இரு கூறாகப் பிளந்த காரணத்தால்  அன்னை பாரதத்தின் புதல்வர்கள்  குடியேற்றத்திற்காக இரயில் வண்டிகளில் பிரயாணம் செய்யும்போது வன்முறைக்கு ஆளாகி குடும்பம் குடும்பமாக மரணத்தைத் தழுவிய இரத்த சரித்திரத்தின் கொடுமைதான் என்னே .

இவையன்றி வரலாற்றின் பக்கங்களில் இடம் பெறாமல் மறைந்து பட்ட தியாகச் சம்பவங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ!
  
இச்சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் படிப்பினைதான் யாது ?

பெற்ற சுதந்திரத்தின் வலியினை உணர்ந்து கொள்வோம் நாம்.

ஈரைந்து மாதங்கள் தவமிருந்து பெற்ற தாய் தன் சிசுவை நேசிப்பது போல் , வலித்துப் பெற்ற நம் சுதந்திரத்தின் வனப்பை நாம் உணர்ந்து கொள்வோம்.

மதமாச்சரியங்களிலிருந்தும் , இன துவேஷங்களிலிருந்தும் , பிரிவினைவாதிகளிடமிருந்தும் அன்னை  பாரத்தைக் காப்பதில் அனைவரும் ஒன்று படுவோம்.

நமது தாய் திரு நாட்டின் பெருமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த சக்தியும் நம்மை அணுகாமல் கவனமாகக் காத்திடுவோம்.

தன்னலமிக்க அரசியல்வாதிகளின் முகமூடிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களிடமிருந்து நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம்.

உண்மையாகவே நாட்டுக்குழைக்கும் உத்தமர்களுக்கு உறு துணையாக நிற்போம்.

சுதந்திரத்தின் பெருமையை வருகின்ற தலைமுறைக்கு தவறாமல் சொல்லித் தருவோம்.

அன்னை பாரதத்தின் பெருமை அகிலமெங்கும் ஒளி வீசிட அனைவரும் பாடுபடுவோம் !







திங்கள், 11 ஏப்ரல், 2011

உடல் நலம் பெற ஓர் அற்புத பானம்


உடல் நலத்திற்கு மிகவும் நன்மை செய்யக் கூடிய அற்புத பானம் ஒன்றை நண்பர் மின்னஞ்சலித்திருந்தார்.

செய்முறை மிகவும் எளிது.. கிடைக்கும் பயன்களோ அளப்பரியன...!

பானத்தின் பெயர்: அற்புத பானம்

தேவையான பொருட்கள்: காரட் - 1, பீட்ரூட்-1, ஆப்பிள் - 1

செய்முறை: காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து  அருந்தவும்.

உத்தரவதமாகக் கிட்டும் நன்மைகள்:

* புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது

* கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது

* வயிற்றுப் புண்ணை குணமாக்குகிறது

* நுரையீரலைப் பலப்படுத்துகிறது

* இதயத் தாக்குதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வருவதைத் தடுக்கிறது

* நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது

* பார்வைத் திறனை அதிகரிக்கிறது.  களைப்படைந்த கண்களுக்கும் , உலர் கண்களுக்கும்  நன்மை பயக்கிறது.

* தசை வலி மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் தருகிறது

* உடலில் சேரும் நச்சுத் தன்மையை முறிக்கிறது.

* மலச்சிக்கலை எவ்வித சிக்கலுமின்றி குணப்படுத்துகிறது

* சருமத்திற்கு பளபளப்பினைக் கூட்டுகிறது

* அஜீரணம், தொண்டைப் புண் ஆகியவற்றால் ஏற்படும் சுவாச துர்நாற்றத்தை  நிவர்த்தி செய்கிறது

* பெண்களுக்கான மாத விடாய் வலியினைக் குணமாக்குகிறது

* பக்க விளைவுகள் ஏதுமில்லை

* சத்து மிகுந்தது - எளிதில் உடலில் சேரக் கூடியது

* எடைக் குறைப்பிற்கு உதவுகிறது

* இரண்டு வார கால உபயோகத்திலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

அருந்தும் விதம்

- காலையில் வெறும் வயிறில் அருந்தவும்.

- சாறு பிழிந்த உடனேயே அருந்துவது மிகுந்த நன்மை தரும்

- அருந்திய பின்  ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம்

- அதிகப் பலன் பெற காலை ஒரு முறை, மாலை 5 மணிக்கு முன்பு ஒரு முறை என இரண்டு வேளைகள் அருந்தலாம்

குறைந்த செலவில் நிறைந்த பலன் களை வாரி வழங்கும் அற்புத பானத்தை நீங்கள் உடனே அருந்தத் துவங்குங்கள்அளப்பரிய நன்மைகளைப் பெறுங்கள்..!




செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அன்பான வேட்பாளப் பெரு மக்களே ...!




தேர்தல் இதோ நெருங்கி விட்டது...!

வேட்பாளர்கள் சுட்டெரிக்கும்  வெயிலென்றும் பார்க்காமல் சந்து சந்தாக , தெருத் தெருவாக சுற்றி சுற்றி வாக்கு சேகரிக்கிறார்கள். அவர்களை  விடவும் சுறுசுறுப்பாக கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு பின்னாலேயே திரிகிறது தேர்தல் ஆணையம்.

எதற்காக ? அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காக !

இந்த நிலைமை வந்து விட்டதற்காக உண்மையிலேயே அரசியல் கட்சிகள் கூச்சப்பட வேண்டாமா ?

ஆளும் கட்சியாக இருக்கும் பட்சத்தில் செய்த நன்மைகளைக் கூறியும், ஆளும் வாய்ப்புக் கிட்டாத கட்சிகள் ( எதிர்க் கட்சி என்பதை  இப்படி  நாசூக்காகச் சொல்லலாமே ) தங்களுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பு கிட்டுமேயானால் அவர்கள் செய்யப் போகும் நன்மைகளைக் கூறியும் வாக்குக் கேட்டால் அல்லவா அங்கே ஜன நாயகம் தழைத்தோங்கும் ?

மாறாக ஒரு ஜன நாயகக் கட்டமைப்பில் எஜமானராக இருக்க வேண்டிய வாக்காளரை  யாசகராக மாற்றும் அரிய பணியைச் செய்வதற்கு எல்லாக் கட்சிகளும் முனைப்போடு வேலை செய்வதும் , அதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் என்னும் அரசுத் துறை போலீஸ் வேலை பார்ப்பதும் விரும்பத் தக்கதுதானா

இந்த  நிலை வருவதற்காகவா நமது தேசியத் தலைவர்கள் இன்னுயிர் ஈந்து சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள் ? இதற்காகவா அண்ணல் அம்பேத்கார் போன்ற அறிஞர்கள் நமக்கு அரசியலமைப்பு சட்டம் வடிவமைத்துத் தந்தார்கள் ?

அன்பான வேட்பாளப் பெரு மக்களே ...! உங்களுக்கொரு வேண்டுகோள் ..

இனியும் இந்த தேசத்தின் குடிமகனை  உங்களுடைய எலும்புத் துண்டுக்கு ஓடி வரும் ஞமலியாக்காதீர்கள் . உங்களுக்கு ஆட்சி உரிமை வழங்கும் அவனுக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள் . உண்மையிலேயே அவனுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டுமேயானால், உங்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டு காலத்திற்குள் எவ்வளவோ செய்யலாமே , அந்த வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..தேர்தல் சமயத்தில் அவன் முகத்தில் கரன்சியை விட்டெறிந்து விட்டு ஐந்தாண்டு காலம் தொகுதிப் பக்கமே தலை வைத்துப் படுக்க வேண்டியதில்லை என்ற உங்கள் மனப் பாங்கினை சற்றே மாற்றிக் கொள்ளுங்கள் - அவனுடைய  நலம் கருதி மட்டுமல்ல், உங்களின் நலம் கருதியும்தான்.

உங்களின் கடந்த கால சாதனைகளும், வருங்காலத் திட்டங்களும் மட்டுமே வாக்காளன் முன் நீங்கள் வைக்கும் வெகுமதியாக இருக்கட்டும்.

அதனை சீர் தூக்கிப் பார்த்து வாக்காளன் அளிக்கும் தீர்ப்பில் நேர்மை மிளிரும் !

உரிய நபரைத் தேர்ந்தெடுத்தோம் என்ற நிம்மதி  வாக்காளருக்குக் கிடைக்கும் !

சரியான வகையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றோம் என்ற அற்புதமான திருப்தி உங்களுக்கு வசப்படும்  !

அதன் மூலம் உங்கள் செயல் திறன் மேம்பட்டு தேசம் பயன் பெறும் !

எத்தனையோ நாடுகளுக்குக் கிடைக்காத   ஜன நாயக உரிமை நமக்குக் கிடைத்துள்ளதே அதன் மூலமாக நமது இந்திய தேசம் உலக அரங்கில்  தலை நிமிர்ந்து நிற்கும்.

நல்லதே நடக்கும்.... நம்புவோமாக ...!






சனி, 26 மார்ச், 2011

நேற்றைப் போலவே... ( கவிதை ஒன்று )







                  
என் அறையை இன்னும் கொஞ்சம்
நேர்த்தியாக அமைக்க விரும்பினேன் -

நகரத்திலிருக்கும் ஒரு பல் மருத்துவரின்
வரவேற்பறையைப் போலவே .

என் ஆடைகளை இன்னும் கொஞ்சம்
நேர்த்தியாக அணிய விரும்பினேன் -

முதன் முதலாக நேர்முகத் தேர்வை
எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின்
ஆடையைப் போலவே.

என் மனத்தை இன்னும் கொஞ்சம்
இலேசாக்க விரும்பினேன் -

பால் குடித்து முடித்தபின்
தாயின் முந்தானைக்குள்
உறங்கத் துவங்கும் ஒரு சிசுவைப் போலவே .

என் குரலை இன்னும் கொஞ்சம்
மிருதுவாக்க விரும்பினேன் -

பெண் பார்க்கும் நிகழ்வில்
அவன் கேட்கும் கேள்விகளுக்கு
அவள் தரும் பதில்களைப் போலவே.

என் புத்தகங்களை இன்னும் கொஞ்சம்
சீராக அடுக்க விரும்பினேன் -

ஒரு பழக்கடைக் காரனின்
தட்டுகளில் அடுக்கப்படடிருக்கும்
ஆப்பிள்களைப் போலவே .

இவையெல்லாவற்றையும்
உடனடியாக செயல்படுத்த விரும்பினேன் -

நேற்றைக்கும் அதற்கு முன்பும்
விரும்பியது போலவே .

வியாழன், 24 மார்ச், 2011

இந்தியா ஜெயிச்சாச்சு...


இரவு பத்தரை மணிக்கு சென்னை நகரெங்கும் பட்டாசு முழக்கங்கள்.. ! (தீபாவளி முன் கூட்டியே வந்துடிச்சா என்ன  ? )

அதெல்லாம் ஒண்ணுமில்லே ...! ஹுர்ரே....உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில்  இந்தியா ஆஸ்திரேலியாவை ஜெயிச்சாச்சு...

ஸ்வீட் எடு..கொண்டாடு...!

யாரங்கே... யுவராஜுக்கும் , ரெய்னாவுக்கும் திருஷ்டி சுத்திப் போடுங்கப்பா .

தோணியாக வந்திருந்து நமது பெருமை மிகு இந்திய அணியைக்  கரை சேர்த்த காப்டன் தோனி அண்ணாத்தைக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் !

சமத்துப் பசங்களா , மொஹாலியில் பாகிஸ்தான் பசங்களையும் கெலிச்சு அப்படியே உலகக் கோப்பைய உசத்திப் பிடிங்கப்பா !

மனசு இருந்தா மார்க்கம் இருக்கும்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

திங்கள், 21 மார்ச், 2011

தலைவர்களுக்குப் புதிய பெயர்கள்


இதோ வந்தே விட்டது சட்டசபைத் தேர்தல்..!

கூட்டணிக் குஸ்திகளிலெல்லாம் ஒரு வழியாக  முடிவுக்கு வந்து , வேட்பு மனுத் தாக்கல்களும் தொடங்கியாகி விட்டது.

கொளுத்தும்  கொடிய வெயிலிலும் வாக்கு சேகரிக்க ஊர் ஊராக , வீதி வீதியாகப் புறப்பட்டு விட்டார்கள் தொண்டர்களும் , தலைவர்களும்.

அவர்களின் சுற்றுப் பிரயாணத்தில் பூத் திறப்பு விழாவும், தண்ணீர் பந்தல் திறப்பு விழாவும் தவறாமல் இடம் பெறும். அதன் ஒரு பகுதியாக குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் வைபவங்களும் நடப்பதுண்டு ( சில சமயங்களில்  வளர்ந்த குழந்தைகளுக்கும் கூட பெயர் சூட்டப்படும்  ) .

காலம் காலமாகத் தலைவர்கள்தாம் பெயர் சூட்ட வேண்டுமா என்ன, ஒரு மாறுதலுக்கு - இன்றைய சூழலுக்குத் தகுந்தவாறு அவர்களுக்கு நாம் பெயர் சூட்டி மகிழலாமே.!




படித்தீர்களா ?  ரசித்தீர்கள்தானே ?

அப்படியென்றால் கார்ட்டூன் பற்றியும் கருத்துக்கள் பற்றியும் உங்கள் அபிப்பிராயங்களைப் பின்னூட்டமிடலாமே ... கொஞ்சம் சோம்பல்படாமல்...!


வியாழன், 10 பிப்ரவரி, 2011

இதோ, ஒரு கார்ட்டூன்...!


வலைப்பூ உருவான தினத்திலிருந்தே நேயர்களின் ஏகோபித்த கேள்வி ` நீங்கள் வரைந்த கார்ட்டூன் எப்போ வரும் ?' என்பதுதான்.

 ` அஞ்சாப்பு படிக்கும்போது கில்லி விளையாடியதையெல்லாம் பலர் வலைப்பூவில் பெருமையடித்துக் கொள்ளும்போது திறமையான (!) கார்ட்டூனிஸ்டான நீங்கள் ஏன் உங்கள் கார்ட்டூனை வலைப்படுத்திக் கொள்ளவில்லை என்று கோபித்துக் கொண்ட அவர்களின் வேண்டுகோளைப் புறந் தள்ள மனமில்லை.

ஆகவே, இதோ ஒரு புதிய கார்ட்டூனின் அறிமுகம்....

கார்ட்டூனை ரசித்தீர்களா ? நன்று... உங்கள் கருத்தைப் பின்னூட்டமிடலாமே.. !


இந்தக் கார்ட்டூன் உங்கள் அழகிய முகத்தில் புன்னகையை வரவழைத்ததா அல்லது முகச்சுளிப்பை வரவழைத்ததா என்று அறிந்து கொள்ள ஒரு நல் வாய்ப்பை வழங்குங்களேன்...




ஞாயிறு, 23 ஜனவரி, 2011

காய்கறி வாங்கப் போன மச்சான்…........ (நகைச்சுவைக் கவிதை)




காய்கறி வாங்கக் கடைக்குப் போன மச்சான்
கதிகலங்கிப் போயித் திகைச்சு நின்னான்

காய்கறி வாங்க அவன் நெனச்சதில்லே
கனா கூட இதுவரைக்கும்  கண்டதில்லே

ஆயாசம் அடிக்கடி வருதுன்னு
நோயாளியாப் போனான் வைத்தியரத் தேடி .

சூப்பு வச்சு குடிச்சா சரியாப் போகுமின்னு
சொல்லிப் போட்டாரய்யா வைத்தியரய்யா.

சூப்புக்குக் காய் வாங்கப் போன மச்சான்
துவண்டு போனான் வெலையக் கேட்டு.

வெங்காயம் வெல மட்டும் நூறு ரூவாயாம்
வெல சொல்ல பீசு மட்டும் பத்து ரூவாயாம்

சொத்தையில்லாத  கத்தரிக்கா வேணுமின்னா
சொத்தையெல்லாம் வித்துப்புட்டுப் போகணுமாம்.

கம்மலை  அடகு வச்சு மகராசிங்க
காரட்டு  வாங்கிக்கிட்டுப் போனாங்க

மூக்குத்திய வித்துட்டு வந்த புள்ளத்தாச்சிக்கு
முள்ளங்கிப் பத்த மட்டுந்தான் அகப்பட்டுச்சு.

பச்சைப் பட்டாணி பாக்கட்டுக்குக் காவலா
பக்கத்துலயே நிக்கிறான் போலீசுக்காரன்

எடை போட்டுக் குடுத்த பழக்கமெல்லாம்
எப்பவோ மலையேறிப் போயிருச்சாம்

ஒத்த தக்காளியோட வெல மட்டும்
ஒம்போது ரூவாய்னு சொன்னாக.

பூண்டு வெல கேட்டுப் போனவுக
பூதம் அடிச்சாப்ல வந்தாக

எல்லா வெலயையும் கேட்டுப்புட்டு
என்னமோ பண்ணுதுன்னு சொன்ன மச்சான்

மண்டை கிறுகிறுத்து மயங்கிப் போயி
மந்தையிலே விழுந்தான் குப்புறடிச்சு.

தண்ணி தெளிச்சு எழுப்பி விட்ட ஒரு பெரிசு
தன்மையா சொல்லிச்சு அவன் காதுக்குள்ள

"பலகீனம் மட்டும்தாம்பா ஒன்னோட வியாதி
பயப்படாதே , காய் கறி துன்னு, சரியாப் போகும்."

திரும்பவும் மயக்கம் போட்டு விழுந்தான் மச்சான்
தெளியறதுக்கு யாராச்சும் வழி சொல்லுங்கோ .


ஞாயிறு, 9 ஜனவரி, 2011

சென்னை புத்தகக் காட்சி




மார்கழி மாதம் பிறந்து விட்டால் சென்னை பயங்கர பிசியாகி விடுகிறது

அரைகுறையாக வெந்த டெல்லி அப்பளத்தின் மீது கொஞ்சம் மிளகாய் பொடியும், நிறைய தூசியும் பூசி சுவைத்து, ஜெயண்ட் வீலில் பிரயாணித்து வயிறு கலங்கி , மொய்த்த  ஈக்களைத் தூரமாக  விரட்டிவிட்டு கரும்பு சாற்றினைப் பருகி  சுற்றுலாப் பொருட்காட்சியை  மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள் ஒரு பக்கம்.

"சாயந்திரம் மியூசிக் அகாடமியில சுதா பாடறாங்க..இன்னிக்கு வாணி மஹால்ல கத்ரி கச்சேரியாக்கும்" என்று பட்டுப் புடவையும், அங்கவஸ்திரமும் சலசலக்க பரபரப்பாக இன்னோவாவிலும் , போலோவிலும் ஆரோகணித்து இசை விழாக்களை ரசிக்கும் கலா ரசிகர்களின் ஆலாபனை இன்னொரு பக்கம்.

இதற்கு நடுவே , இன்னுமோர் உற்சவசமாய் ....சென்னை புத்தகக் காட்சி.

இந்த வருடம் 34 வது புத்தகக் காட்சியாம் இது.

தொண்ணூறுகளில் காயிதே மில்லத் கல்லூரியில் ஒரு சிறிய அளவில் தொடங்கப்பட்ட புத்தகக் காட்சி , இப்போது ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் இரண்டு லட்சம் சதுர அடியில் , 650  அரங்குகளோடு பிரம்மாண்டமாய் வளர்ந்திருப்பது அற்புதம்

கடந்த வருடம் போலல்லாமல், இவ்வாண்டு ஏற்பாடுகளில் நல்ல முன்னேற்றம்

ஸ்டால்களுக்கிடையே நெரிசல் இல்லாமல்  இலகுவாக மக்கள் சென்று வரும் வகையில் நல்ல அகலமான பாதைகள். கம்பன், இளங்கோ, பாரதியார்  என்று புலவர்களின் பெயரில் அவற்றுக்கு நாமகரணம் வேறு. ஷேக்ஸ்பியர், ஷெல்லி பெயர்களிலும் பாதைகள்         (ஆங்கிலத்திற்கு மரியாதை ! ).

ஒரு சில ஸ்டால்கள் மட்டும் கிராமத்துத் தெருவிளக்கு மாதிரி டல்லடித்துக் கொண்டிருக்க , பல ஸ்டால்களில் `பீக் அவர்' பஸ் மாதிரி நல்ல கும்பல் .

 குறிப்பாக உயிர்மை ஸ்டாலில்  மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா போன்ற இலக்கிய நட்சத்திரங்களைச்  சுற்றிலும் ஏராளமான ரசிகர்கள்.சாருவின் முகமெல்லாம் சிரிப்பு பொங்க , இரு கரம் கூப்பி  " வாங்க, வாங்க.... போன வருஷம் பார்த்தது " என்று  வரவேற்றுக் கொண்டிருக்க, மாறாத புன்னகையுடன் மனுஷ்யபுத்திரன் ஆட்டோகிராப் வழங்கிக் கொண்டிருக்க, புத்தகம் வாங்க நேயர்கள் முண்டியடித்துக் கொண்ட காட்சி உன்னதம்.

சாருவின் `தேகம்', மனுஷின் ` இதற்கு முன்பும் இதற்கு பிறகும் ' , எஸ்.ராவின் `துயில்' போன்ற புத்தகங்கள்  தலப்பாக்கட்டு பிரியாணி ரேஞ்சில் மள மள வென்று காலியாகிக் கொண்டிருந்தன.

கடந்த முறை மையம் கொண்டிருந்த `சமையல் புத்தகப்' புயல் இம்முறை கரையைக் கடந்து விட்டது போலிருக்கிறது. சுய முன்னேற்றம், சமூகம், விளையாட்டு, அரசியல் தொடர்பான புத்தகங்கள் ஏராளம்.

வழக்கம் போலவே புதினங்களுக்கும் குறைவில்லை. கல்கியின் பொன்னியின் செல்வன் மட்டும் பல்வேறு அவதாரங்கள் எடுத்து பலப்பல ஸ்டால்களில் காட்சி தந்தது. ஓரிடத்தில் 450 ரூபாய்க்கும் , மற்றோரிடத்தில் 250 ரூபாய்க்குமாக அச்சுத் தகுதிக்கேற்ற விலை .ஒப்பற்ற காவியமான அதை சினிமா பாட்டுப் புத்தக ரேஞ்சுக்கு தரம் குறைத்தது வருத்தமளிக்கிறது. நூல்களைப் `பொதுமை'ப் படுத்துவதின் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்று. இம்மாதிரியான இலக்கியப் பொக்கிஷங்களையாவது நேர்த்தியோடு அச்சிட்டு வழங்கப்படுவதைப் பதிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஒரு ஸ்டாலில் விமலாதித்ய மாமல்லன் அளவளாவிக் கொண்டிருக்க, மற்றோர் இடத்தில் ஞானி `49 ' பிரிவு பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்


தினத்தந்தி அரங்கில் `வரலாற்றுச் சுவடுகள்' நூல் விற்பனையும் படு  அமர்க்களம். ஆனால் ஒரே ஒரு குறை - பக்கத்து அரங்கில் பத்து ரூபாய்க்கு வாங்கிய புத்தகத்தைக்  கூட   ஒரு பையில் போட்டுக் கொடுக்க, நல்ல கனமான வரலாற்றுச் சுவட்டை வெறுமனே கையில் தூக்கிக் கொடுக்கிறார்கள். எப்படி வைத்துக் கொள்வது என்று தெரியாமல் பலர் ஒரு குழந்தையைப் போல சுமந்து திரிந்து அவஸ்தைப் பட்டது ஒரு வரலாற்றுச் சுவடு. தினத்தந்தி ஆவன செய்வார்கள் என்று நம்புவோம்.


புத்தகங்களுக்கு இணையாக குறுந்தகடுகள் விற்பனையும் கன ஜோர்  குறிப்பாகக்  கல்வி வளர்ச்சி , மொழி வளர்ச்சி தொடர்பான குறுந்தகடுகள் .

அரங்கங்கள்  முழுவதையும் நடந்து பார்ப்பது சற்றே கடினமான விஷயம்தான். முழங்கால்களைத்  தாஜா செய்து கொண்டே சமாளிக்க வேண்டியிருக்கிறது. கடக்க முடியாத பலர் அக்கடாவென்று தரையிலேயே அமர்ந்து மசாலா டீ குடிப்பதைக் காண முடிகிறது.

அரங்கின் முற்பகுதியில் ஆங்காங்கே பெஞ்சுகள் போடலாம். ஏற்பாட்டாளர்கள் பரிசீலிக்கவும்.


அரங்கத்திற்கு வெளியே பிரம்மாண்டமான பந்தலின் கீழ் பரப்பப்பட்ட ஏராளமான நாற்காலிகள் -   முழுக்க இலக்கிய ரசிகர்கள்
செக்கச் சிவந்த மேனியோடு, செம்மொழி நர்த்தனமாட கம்பீர குரலில் கவிஞர் வாலியின் தலைமையில் கவிய்ரங்கம்


எனக்கு ஏன் பிடிக்கும் நந்தலாலா
என் இதயத்திற்குள் அவர் வந்ததாலா

என்று வாலி தொடங்க,


நாங்கள் காற்றை சுவாசிக்கிறோம்
காற்று உன் கவிதையை சுவாசிக்கிறது


என்று நந்தலாலா திருப்பித் தாக்க, அரங்கு கொள்ளா சுவைஞர்களிடமிருந்து பறக்கிறது அப்ளாஸ்.

செவிக்குணவு இருக்கும்போதே வயிற்றுக்கும் ஈவதற்கு வசதியாக சற்று தூரத்தில் செட்டி நாடு கேட்டரிங். பாட்டுக் கேட்டுக் கொண்டே பரோட்டாவை வெட்டுவதும் சுகம்தான்.

சென்னையைத் தாண்டி வசிக்கும் அன்பர்களுக்கொரு விண்ணப்பம்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் மிகுந்த சிரத்தையோடு ஏற்பாடு செய்திருக்கும் இந்த அருமையான புத்தகக் காட்சியை தவறவிட்டு விடாதீர்கள்.

ஜனவரி மாதம் 17 தேதி வரை காட்சி உண்டு.

பொங்கலை உங்கள் ஊரில் கொண்டாடிவிட்டு அடுத்து வரும் விடுமுறை நாட்களில் வாருங்கள் சென்னைக்கு. ( ஜல்லிக்கட்டை அலங்கா நல்லூர்காரர்கள் கவனித்துக் கொள்வார்கள், கவலை வேண்டாம்).

உங்கள் ஆவல் தீர புத்தகங்களை சுவாசித்து, ஏராளமாக அள்ளிச் செல்லுங்கள்.

செலவென்று எண்ண வேண்டாம் - அறிவின் சேமிப்பு என்பதை உணருங்கள்.

படிப்பாளிகள் கெட்டுப் போனதாக சரித்திரமில்லை.