திங்கள், 11 ஏப்ரல், 2011

உடல் நலம் பெற ஓர் அற்புத பானம்


உடல் நலத்திற்கு மிகவும் நன்மை செய்யக் கூடிய அற்புத பானம் ஒன்றை நண்பர் மின்னஞ்சலித்திருந்தார்.

செய்முறை மிகவும் எளிது.. கிடைக்கும் பயன்களோ அளப்பரியன...!

பானத்தின் பெயர்: அற்புத பானம்

தேவையான பொருட்கள்: காரட் - 1, பீட்ரூட்-1, ஆப்பிள் - 1

செய்முறை: காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து  அருந்தவும்.

உத்தரவதமாகக் கிட்டும் நன்மைகள்:

* புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது

* கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது

* வயிற்றுப் புண்ணை குணமாக்குகிறது

* நுரையீரலைப் பலப்படுத்துகிறது

* இதயத் தாக்குதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வருவதைத் தடுக்கிறது

* நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது

* பார்வைத் திறனை அதிகரிக்கிறது.  களைப்படைந்த கண்களுக்கும் , உலர் கண்களுக்கும்  நன்மை பயக்கிறது.

* தசை வலி மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் தருகிறது

* உடலில் சேரும் நச்சுத் தன்மையை முறிக்கிறது.

* மலச்சிக்கலை எவ்வித சிக்கலுமின்றி குணப்படுத்துகிறது

* சருமத்திற்கு பளபளப்பினைக் கூட்டுகிறது

* அஜீரணம், தொண்டைப் புண் ஆகியவற்றால் ஏற்படும் சுவாச துர்நாற்றத்தை  நிவர்த்தி செய்கிறது

* பெண்களுக்கான மாத விடாய் வலியினைக் குணமாக்குகிறது

* பக்க விளைவுகள் ஏதுமில்லை

* சத்து மிகுந்தது - எளிதில் உடலில் சேரக் கூடியது

* எடைக் குறைப்பிற்கு உதவுகிறது

* இரண்டு வார கால உபயோகத்திலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

அருந்தும் விதம்

- காலையில் வெறும் வயிறில் அருந்தவும்.

- சாறு பிழிந்த உடனேயே அருந்துவது மிகுந்த நன்மை தரும்

- அருந்திய பின்  ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம்

- அதிகப் பலன் பெற காலை ஒரு முறை, மாலை 5 மணிக்கு முன்பு ஒரு முறை என இரண்டு வேளைகள் அருந்தலாம்

குறைந்த செலவில் நிறைந்த பலன் களை வாரி வழங்கும் அற்புத பானத்தை நீங்கள் உடனே அருந்தத் துவங்குங்கள்அளப்பரிய நன்மைகளைப் பெறுங்கள்..!




செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அன்பான வேட்பாளப் பெரு மக்களே ...!




தேர்தல் இதோ நெருங்கி விட்டது...!

வேட்பாளர்கள் சுட்டெரிக்கும்  வெயிலென்றும் பார்க்காமல் சந்து சந்தாக , தெருத் தெருவாக சுற்றி சுற்றி வாக்கு சேகரிக்கிறார்கள். அவர்களை  விடவும் சுறுசுறுப்பாக கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு பின்னாலேயே திரிகிறது தேர்தல் ஆணையம்.

எதற்காக ? அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காக !

இந்த நிலைமை வந்து விட்டதற்காக உண்மையிலேயே அரசியல் கட்சிகள் கூச்சப்பட வேண்டாமா ?

ஆளும் கட்சியாக இருக்கும் பட்சத்தில் செய்த நன்மைகளைக் கூறியும், ஆளும் வாய்ப்புக் கிட்டாத கட்சிகள் ( எதிர்க் கட்சி என்பதை  இப்படி  நாசூக்காகச் சொல்லலாமே ) தங்களுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பு கிட்டுமேயானால் அவர்கள் செய்யப் போகும் நன்மைகளைக் கூறியும் வாக்குக் கேட்டால் அல்லவா அங்கே ஜன நாயகம் தழைத்தோங்கும் ?

மாறாக ஒரு ஜன நாயகக் கட்டமைப்பில் எஜமானராக இருக்க வேண்டிய வாக்காளரை  யாசகராக மாற்றும் அரிய பணியைச் செய்வதற்கு எல்லாக் கட்சிகளும் முனைப்போடு வேலை செய்வதும் , அதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் என்னும் அரசுத் துறை போலீஸ் வேலை பார்ப்பதும் விரும்பத் தக்கதுதானா

இந்த  நிலை வருவதற்காகவா நமது தேசியத் தலைவர்கள் இன்னுயிர் ஈந்து சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள் ? இதற்காகவா அண்ணல் அம்பேத்கார் போன்ற அறிஞர்கள் நமக்கு அரசியலமைப்பு சட்டம் வடிவமைத்துத் தந்தார்கள் ?

அன்பான வேட்பாளப் பெரு மக்களே ...! உங்களுக்கொரு வேண்டுகோள் ..

இனியும் இந்த தேசத்தின் குடிமகனை  உங்களுடைய எலும்புத் துண்டுக்கு ஓடி வரும் ஞமலியாக்காதீர்கள் . உங்களுக்கு ஆட்சி உரிமை வழங்கும் அவனுக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள் . உண்மையிலேயே அவனுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டுமேயானால், உங்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டு காலத்திற்குள் எவ்வளவோ செய்யலாமே , அந்த வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..தேர்தல் சமயத்தில் அவன் முகத்தில் கரன்சியை விட்டெறிந்து விட்டு ஐந்தாண்டு காலம் தொகுதிப் பக்கமே தலை வைத்துப் படுக்க வேண்டியதில்லை என்ற உங்கள் மனப் பாங்கினை சற்றே மாற்றிக் கொள்ளுங்கள் - அவனுடைய  நலம் கருதி மட்டுமல்ல், உங்களின் நலம் கருதியும்தான்.

உங்களின் கடந்த கால சாதனைகளும், வருங்காலத் திட்டங்களும் மட்டுமே வாக்காளன் முன் நீங்கள் வைக்கும் வெகுமதியாக இருக்கட்டும்.

அதனை சீர் தூக்கிப் பார்த்து வாக்காளன் அளிக்கும் தீர்ப்பில் நேர்மை மிளிரும் !

உரிய நபரைத் தேர்ந்தெடுத்தோம் என்ற நிம்மதி  வாக்காளருக்குக் கிடைக்கும் !

சரியான வகையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றோம் என்ற அற்புதமான திருப்தி உங்களுக்கு வசப்படும்  !

அதன் மூலம் உங்கள் செயல் திறன் மேம்பட்டு தேசம் பயன் பெறும் !

எத்தனையோ நாடுகளுக்குக் கிடைக்காத   ஜன நாயக உரிமை நமக்குக் கிடைத்துள்ளதே அதன் மூலமாக நமது இந்திய தேசம் உலக அரங்கில்  தலை நிமிர்ந்து நிற்கும்.

நல்லதே நடக்கும்.... நம்புவோமாக ...!