ஞாயிறு, 21 நவம்பர், 2010

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

கம்பீரமான மீசைக்கும், கட்டுக்கடங்காத சுதந்திரமான நடைக்கும் சொந்தக்காரர் எழுத்தாளர் ஜெயந்தன் அவர்கள்.

தெளிந்த நீரோட்டம் போன்ற அவருடைய எழுத்துசிறுகதை மற்றும் நாடகங்கள் மூலம் தமிழ் பேசும் நல்லுலகில் பலருக்கும் பரிச்சயமானதும், பிரியமானதும் கூட !

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், நண்பர்களுடன் அறிவார்ந்த செய்திகளைப் பகிர்ந்து கொண்டு மனதிற்குப் பிடித்த வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளின் காரணமாக சொந்த ஊரான மணப்பாறைக்குக் குடியேறியவர்.

மணவைத் தமிழ் மன்றத்தின் புரவலர் திரு.சௌமா.ராசரத்தினம் அவர்களின் ஒத்துழைப்போடு `சிந்தனைக் கூடல் ' என்ற அமைப்பைத் துவக்கினார்தனது இறுதி மூச்சு வரை அதை சிறப்பாக நடத்தி தனது மணவை குடியேற்றத்திற்கான நோக்கம் நிறைவேறிய திருப்தியையும் , ஒரு புது விதமான இலக்கிய சுகத்தினை மணப்பாறை நண்பர்களுக்கு அளித்த பெருமையையும் ஒரு சேரப் பெற்றார். அவர் எழுதிக் கொண்டிருந்த புதினம் முழுமை அடையும் முன்பே நிகழ்ந்து விட்ட அவருடைய எதிர் பாராத மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பே !.

ஜெயந்தன் அவர்களின் நினைவாக இலக்கிய பரிசுப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது மணப்பாறை செந்தமிழ் அறக் கட்டளை.

நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கும் போட்டி இது.

இது பற்றி கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் தெரிவித்த சிறந்த கருத்து இது:

" போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டுமென்று காத்திருப்பது கூ அவசியமில்லை. படைப்பாளிகளிடம் கேட்டு வாங்கியும் போட்டியில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பல நல்ல எழுத்தாளர்கள் ரிசு கேட்க கூச்சப்பட்டு போட்டியில் கலந்து கொள்ளாமலிருக்கும் வாய்ப்பு உண்டு ".

நியாயம்தான்.

தன்னடக்கம் காரணமாக நல்ல படைப்புகள் சபைக்கு வராமல் போகுமேயானால் இழப்பு இலக்கிய வளர்ச்சிக்குதான்.

ஆகவே நண்பர்களே, உங்களுக்கு அறிமுகமான  படைப்பாளிகளிடம்  போட்டி குறித்துத் தெரிவியுங்கள் !

சிறந்த படைப்புகள் கௌரவிக்கப்படும் பொழுதில் ஜெயந்தன் அவர்களின் ஆத்மா மகிழ்ச்சி பெறட்டும்!

போட்டியின் விவரங்கள்:

* ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி

*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் 2010 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ.10,000 வழங்கப்படும்.

*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.

*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-01-2011

 *அனுப்ப வேண்டிய முகவரி

கவிஞர். தமிழ்மணவாளன்
18, பத்மாவதி நகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051


வியாழன், 4 நவம்பர், 2010

தீபாவளிக் கொண்டாட்டங்கள்




சூரிய அஸ்தமன நொடியிலிருந்து சென்னை வானவெளியெங்கும் வண்ண மலர்களின் அமோக அணிவகுப்பு.

தெருவின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு சீறிப் பாயும் சிவகாசி ராக்கெட்டுகள் .

டமால் , டுப் போன்ற இன்னபிற சத்தங்கள் மூலம் பேப்பர் துண்டுகளை சிதறடிக்கும் வெடிகள் .

விரல்களில் கந்தகம் பூசிய சின்னஞ்சிறு தளிர்களின் உழைப்பில் கிட்டிய மகசூல்  -  பட்டாசுகளாய் ஊரெங்கும் .

சமையல் எண்ணை விலை உயர்வின் கவலையோடு , வடை விள்ளாமல் வருமா என்ற கவலையும் சேர்ந்து கொள்ள அடுப்புடன் போராடும் தாய்மார்கள் .
தீபாவளியின் மணம் காற்றில் நீக்கமற நிறைந்திருக்கிறது.

பொருள் தேடும் அதீத பரபரப்பில் வருடம் முழுக்க சிக்கித் தவிக்கும் மனித குலத்திற்குப் பண்டிகைகள் சந்தேகத்திற்கிடமின்றி அவசியமாகின்றன.


ஒவ்வொரு சமயத்தாரும் கொண்டாடுவதற்கான காரணங்களை வெவ்வேறாக வகுத்துக் கொண்டாலும் நோக்கம் ஒன்றாகவே அமைகின்றது. அதில் குறிப்பிடத்தக்க அம்சம் சுவையான உணவு சுவைப்பதும், புத்தாடை அணிவதும், உறவினர் மற்றும் நண்பர்களை சந்தித்து உரையாடி மகிழ்வதும்தான்.

ஒரு முறை ரசிகமணி டி.கே.சி அவர்களிடம் , பஜ்ஜியில் சுவையானது வாழைக்காய் பஜ்ஜியா அல்லது உருளைக் கிழங்கு பஜ்ஜியா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

ரசிகமணியின் பதில் இது: " அளவான உப்பும், காரமும் சேர்க்கப்பட்ட சுவையான கடலை மாவில் ஒரு துண்டு ஹிந்து செய்தித் தாளினைத்  தோய்த்து எடுத்து சூடான எண்ணையில் பொரித்து எடுத்தால் கிடைக்கும் ஹிந்து பேப்பர் பஜ்ஜிதான் ருசியானது ".

இதனால் பெறப்படும் நீதி யாதெனில்  சுவை என்பது சூடான எண்ணையிலும்  மாவிலும்தான் இருக்கிறதே தவிர வாழைக்காயிலோ அல்லது உருளைக் கிழங்கிலோ இல்லவே இல்லை.

( நணபர்களோடு உட்கார்ந்து தண்ணியடிப்பது சந்தோஷம் தருவதாக நம்பும் அன்பர்களே, இப்போது புரிந்து கொள்ளுங்கள்- சந்தோஷம் தருவது நண்பர்களின் நெருக்கம்தானே தவிர ஆல்கஹால் திரவம் அல்ல.)

இனியவர்களின் சந்திப்பின் மூலமாகவும் , இன்சுவை உணவின் மூலமாகவும் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற பெருமை பெற்ற பண்டிகைகளைப் போற்றுவோம் !

அக்கம் பக்கத்தாருக்கு சிரமம் தராத வகையிலும் காற்றினை மாசு படுத்தாத முறையிலும்  அளவான பட்டாசுகளை வெடித்து, உடல் நலத்திற்குக் கேடு தராத உணவுகளை அருந்தி மகிழ்வோடு தீபத் திரு நாள் கொண்டாடிட வாழ்த்துக்கள் !