கம்பீரமான மீசைக்கும், கட்டுக்கடங்காத சுதந்திரமான நடைக்கும் சொந்தக்காரர் எழுத்தாளர் ஜெயந்தன் அவர்கள்.
தெளிந்த நீரோட்டம் போன்ற அவருடைய எழுத்து, சிறுகதை மற்றும் நாடகங்கள் மூலம் தமிழ் பேசும் நல்லுலகில் பலருக்கும் பரிச்சயமானதும், பிரியமானதும் கூட !
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், நண்பர்களுடன் அறிவார்ந்த செய்திகளைப் பகிர்ந்து கொண்டு மனதிற்குப் பிடித்த வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளின் காரணமாக சொந்த ஊரான மணப்பாறைக்குக் குடியேறியவர்.
மணவைத் தமிழ் மன்றத்தின் புரவலர் திரு.சௌமா.ராசரத்தினம் அவர்களின் ஒத்துழைப்போடு `சிந்தனைக் கூடல் ' என்ற அமைப்பைத் துவக்கினார். தனது இறுதி மூச்சு வரை அதை சிறப்பாக நடத்தி தனது மணவை குடியேற்றத்திற்கான நோக்கம் நிறைவேறிய திருப்தியையும் , ஒரு புது விதமான இலக்கிய சுகத்தினை மணப்பாறை நண்பர்களுக்கு அளித்த பெருமையையும் ஒரு சேரப் பெற்றார். அவர் எழுதிக் கொண்டிருந்த புதினம் முழுமை அடையும் முன்பே நிகழ்ந்து விட்ட அவருடைய எதிர் பாராத மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பே !.
ஜெயந்தன் அவர்களின் நினைவாக இலக்கிய பரிசுப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது மணப்பாறை செந்தமிழ் அறக் கட்டளை.
நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கும் போட்டி இது.
இது பற்றி கவிஞர் மனுஷ்ய புத்திரன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் தெரிவித்த சிறந்த கருத்து இது:
" போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டுமென்று காத்திருப்பது கூட அவசியமில்லை. படைப்பாளிகளிடம் கேட்டு வாங்கியும் போட்டியில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பல நல்ல எழுத்தாளர்கள் பரிசு கேட்க கூச்சப்பட்டு போட்டியில் கலந்து கொள்ளாமலிருக்கும் வாய்ப்பு உண்டு ".
நியாயம்தான்.
தன்னடக்கம் காரணமாக நல்ல படைப்புகள் சபைக்கு வராமல் போகுமேயானால் இழப்பு இலக்கிய வளர்ச்சிக்குதான்.
ஆகவே நண்பர்களே, உங்களுக்கு அறிமுகமான படைப்பாளிகளிடம் போட்டி குறித்துத் தெரிவியுங்கள் !
சிறந்த படைப்புகள் கௌரவிக்கப்படும் பொழுதில் ஜெயந்தன் அவர்களின் ஆத்மா மகிழ்ச்சி பெறட்டும்!
போட்டியின் விவரங்கள்:
* ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி
*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் 2010 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ.10,000 வழங்கப்படும்.
*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.
*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-01-2011
*அனுப்ப வேண்டிய முகவரி
கவிஞர். தமிழ்மணவாளன்
18, பத்மாவதி நகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051