புதன், 8 டிசம்பர், 2010

மழை நேரத்துக் கட்டஞ் சாயா


கேரள நன்னாட்டைக் கடவுளின் சொந்த தேசம் என்று சொல்லுவார்கள். உலகத்தைப் படைத்த பிறகு மிஞ்சிய பச்சை வண்ணம் அத்தனையயும் கடவுள் கேரள தேசத்தில் கொட்டி அழகுபடுத்தி விட்ட மாதிரி அப்படி ஒரு பச்சைப் பசேல் தேசம்.


பெருமழைக் காலம் என்றழைக்கப்படும் சூன் முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் சொல்லாமல் கொள்ளாமல் விசிட் அடித்து பரவசப்படுத்தும் மழை ஓர் அற்புதம்.  எங்கு பார்த்தாலும் பச்சை.பச்சை .. மேலும் பச்சை. தரையின் இண்டு இடுக்கு எல்லாம் செடி, கொடிகளால் செழித்திருப்பது ஒரு அழகு என்றால் , கட்டிடங்களின் மதில் சுவரெல்லாம் பாசி மாதிரியான தாவரங்கள் படர்ந்து பசும் சுவர்களாகக் காட்சியளிப்பது இன்னுமோர் அழகு. அதற்கு  நடுவே வயலட் நிறத்தில் குட்டி    குட்டியாய் பூக்கள் பூத்திருப்பது அழகோ அழகு. சுவர்ப் பூக்கள் ! ( கவிதை எழுதுங்கப்பா ...).

விவரிக்க வந்த செய்தி - கட்டஞ் சாயாவைப் பற்றி....

முதல் இரண்டு பாராவிலும் சிலாகித்திருந்த மலையாள தேசத்தின் தலை நகரான திருவனந்தபுரத்தின் அருகிலுள்ள கோவளம் கடற்கரைக்கு நண்பர் பரிமள செல்வத்துடன் சென்றிருந்த தினம் அது.

சுற்றுலா வந்திருந்த அயல் நாட்டுக் குடிமக்களின் விழிகளை ஒத்திருந்த நீலத்தில் - ஸ்படிகம் போன்ற கடல் நீர்.

இன்னும் , இன்னும் என்று ஆசையைத் தூண்டும் அருமையான குளியல்.

அந்த நேரத்தில் , சடாரென்று ஸ்விட்ச் போட்டாற்போல் தொடங்கியது மழை.

கேரளத்துப் பெருமழை பற்றிய முன் அனுபவம் இல்லாத காரணத்தால் வாரிச் சுருட்டிக் கொண்டு கரையை நோக்கி ஓடினோம்.

தென்னை ஓலைக் கூரையுடன் கூடிய ரெஸ்டாரண்ட் அடைக்கலம் தந்தது.

பற்கள் தந்தியடிக்கும் வசீகரக் குளிரில் திளைத்திருந்த நேரத்தில் , உணவகப் பணியாள் ஆர்டர் கேட்டு வந்தார். ஆம்லெட்டும் , டீயும் ` பறைந்து' விட்டு மீண்டும் பற்களால் தந்தியடிக்கத் துவங்கினோம்.

சற்று நேரத்தில் ஆம்லெட் வந்தது. அத்துடன்  பால் இல்லாத டீயும். அங்கு அதற்குப் பெயர் கட்டஞ் சாயா .

ஒரு விள்ளல் ஆம்லெட்டுடன் ஒரு வாய் கட்டஞ் சாயா பருகத் தொடங்கிய அந்த உன்னதமான பொழுதில் எங்களுக்குப் பின்னாலிருந்த கனத்த ஸ்பீக்கரிலிருந்து ஒலிக்கத் துவங்கியது தேனினும் இனிய குரலில் ஜேசுதாசின் மலையாளப் பாடல் ஒன்று.

ஆஹா... என்ன உத்தமமான கணம் அது..

மேனி குளிரும் மழை - சூடான மற்றும் சுவையான ஆம்லெட் - நா பொறுக்கும் சூட்டில் கட்டஞ் சாயா - இதயத்தைத் தொடும் இனிமையான பாடல் !

வருடங்கள் பல கடந்து போன பின்பும் , இன்னும் கட்டஞ் சாயாவை எங்கு பார்த்தாலும் உள்ளத்தில் அலையடிக்கும் உன்னதமா பொழுது அது.

நண்பர் ஆல்பர்ட் மனோகரின் ஆலோசனைப்படி இப்போது கட்டஞ் சாயா உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாகவே மாறி விட்டது.

அருமையான கட்டஞ் சாயா தயாரிக்கும் கலையை உங்களுக்கும் சொல்லித் தருகிறேன்.

 * ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க விடவும்.

* அரை டீஸ்பூன் டீ தூளைப் போட்டு பாத்திரத்தை மூடி ,  அடுப்பை அணைத்து விடவும்.

* பத்து நிமிடம் கழித்து வடிகட்டவும்.

* சுவைக்கேற்ப சீனி மற்றும் எலுமிச்சை சாறு சேர்ப்பது நேயர் விருப்பம்

* இப்போது சுவையான கட்டஞ் சாயா தயார்.

* உங்கள் தயாரிப்பின் நேர்த்தியை அறிய ஒரு டெஸ்ட் : கண்ணாடி டம்ளரில் கட்டஞ் சாயாவை நிரப்பி மேசையின் மீது வைத்து சாயா வழியே நோக்கினால் மேசையின் பரப்பு தெளிவாகத் தெரிய வேண்டும்.

 சூடான ஆம்லெட்டையும், ஜேசுதாஸ் பாடலையும் ஏற்பாடு செய்து கொள்ள  வேண்டியது உங்கள் பொறுப்பு .

உன்னதமான பொழுது உங்களுக்கும் அமைய வாழ்த்துக்கள் !

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

கட்டஞ்சாயா தயாரிப்பு பற்றிக் கூறிய நிஷாந்தனுக்கு நன்றி.

கேரளா மழையைப் பற்றிக் கேள்விப்பட்டதும் அங்கு சென்று நனைய வேண்டும் போலிருக்கிறது.

நிஷாந்தன் சொன்னது…

ஆசையுடன் கருத்து சொன்ன ஆசைத்தம்பிக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

hi chap,

I had the opportunity to taste the "kattan chaya" prepared by your friend Albert (in his office).May be he also learned this art from God's own country during his tenure in Kerala..
Nicely written,
with regards
Gireesan.

Ravindran.N. சொன்னது…

அன்புள்ள நண்பரே ,

அருமையான வாய்ப்பு எனக்கு வந்ததென்று நான் அறிந்தேன்

.தங்கள் படைப்புகள் அருமை .படிக்கிறேன் இனி எந்நாளும் .

ravindaran.n.manaparai.

agrienggravi@gmail.com.

கருத்துரையிடுக